கருத்துக் கணிப்பு நடத்த தடை – மீறினால் நடவடிக்கை எச்சரித்த தேர்தல் ஆணையம் .!

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை கருத்துக் கணிப்புகளை நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ஆம் தேதியும்,  மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு  பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல்  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக பெரும் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் பிப்ரவரி 10 ஆம் தேதி காலை 7 மணி முதல் மார்ச் 7 ஆம் தேதி மாலை 6:30 மணி வரை எந்தவித கருத்துக் கணிப்புக்கும் தடை விதிக்கப்படும் என்று தெளிவாக கூறியுள்ளது.

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் கருத்துக்கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி காலை 7.00 மணி முதல் மார்ச் 7-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்பு நடத்துவது,  ஊடகங்களில் வெளியிடுவது அல்லது விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தல் முடிவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கப்படும்.

உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் இரண்டு ஆண்டுகள் வரை  கூடிய சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக, கொரோனாவின் பரவல் காரணமாக  தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு நாளை வரை( ஜனவரி 31 வரை)  தடையை நீட்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

GO