இந்த முடிவுகளில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் – ஓபிஎஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் முடிவுகளில் திமுக அரசு வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 486-ல், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வெளிப்படையான நேர்மையான தேர்வு முறை நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் உறுதியாக மேற்கொள்ளப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வாக்குறுதியைகூட நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  எந்தத் தேர்வாக இருந்தாலும், அதில் வெளிப்படைத் தன்மை, ஒளிவுமறைவற்ற தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.

குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தேர்வு எழுதிய ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இதனை வெளியிடுவதுதான் பொருத்தமான ஒன்று என்பது அனைவரின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, குரூப் 2, 2A முதல்நிலைத் தேர்வில் தேர்வு எழுதிய ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்களை வெளியிடத் தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் எந்தத் தேர்வாக இருந்தாலும் அதன் மதிப்பெண்களை ஒளிவுமறைவின்றி வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Leave a Comment