நாகர்கோவில் மேயருக்கு கொலை மிரட்டல்… காங்கிரஸ் கவுன்சிலர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 44வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் என்பவர், கொலை மிரட்டல் விடுப்பதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த புகாரில், கார் மூலம் இடிக்க முயன்றதாகவும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மேயர் மகேஷ் தரப்பு கொடுக்கப்பட்ட புகாரில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது கார் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு..!

அந்தநேரத்தில் மற்றொரு காரில் வந்த நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான நவீன்குமார், மேயரின் காரை இடிப்பது போல் தனது காரை நிறுத்தியதாகவும், இதை பார்த்த மேயரின் தபேதர் மணிகண்டன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், தபேதர் மணிகண்டனையும், மேயரையும் தகாத வார்த்தையால் திட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேயரின் தபேதர் மணிகண்டன் நேசமணி நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன்குமார் உள்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் சிக்கிய காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் தலைமறைவாக உள்ளார் என கூறப்படுகிறது. இதனால் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.