பட்டாசு ஆலை வெடி விபத்து – முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேலும், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

அறையில் வெடிமருந்து கலக்கும்போது உராய்வு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியான, காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ1 லட்சமும் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர், விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment