#Breaking:ஏப்ரல் 28 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை – காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று மயிலாடுதுறை சென்றிருந்த நிலையில்,ஆளுநருக்கு  எதிர்ப்புத் தெரிவித்து சில அரசியல் கட்சியினர் கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அதுமட்டுமல்லாமல்,தருமபுர ஆதீனம் அவர்களை சந்தித்துவிட்டு ஆளுநர் திரும்பியபோது,மன்னப்பந்தல் என்ற இடத்தில் சிலர் கற்களையும்,கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது வீசியதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை கடிதம் – அதிமுக வெளிநடப்பு:

இதற்கு கண்டனம் தெரிவித்து,இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.மேலும்,இன்று ஆளுநர் வாகனத்தின் மீது கருப்புக் கொடி வீசட்டப்பட்டதற்கு எதிப்பு தெரிவித்து தமிழக சட்டப் பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

உண்மையில்லை – முதலமைச்சர் விளக்கம்:

இதனைத் தொடர்ந்து,தமிழக சட்டப் பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் சென்ற வாகனம் மீது கற்கள்,கொடிகள் வீசப்பட்டதாக கூறப்படுவதில் எந்த உண்மை இல்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளதாகவும்,ஆனால்,ஆளுநர் விவகாரத்தில் நடக்காத ஒன்றை நடந்தததாக கூறி எதிர்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.எனினும்,ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் இந்த எந்த சமரசமும் திமுக அரசு செய்து கொள்ளாது என்று உறுதி அளிப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை:

இந்த பரபரப்பான சூழலில்,தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் உட்பட அனைத்து மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வலியுறுத்து போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

மேலும்,தமிழகத்தில் பாஜக தனது இருப்பைக் காட்டிக் கொள்ளவே சத்தமிடுகின்றனர்.ஆளுநரை எதிர்த்து போராடக் கூடாது என்று எந்த சட்டமும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே,ஆளுநரை வைத்து தாங்கள் அரசியல் செய்யவில்லை என்றும்,ஆளுநரின் கார் மீது கொடி கம்பம் விழுந்த வீடியோவை பார்த்து விட்டு முதலமைச்சர் பேச வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.