உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் – திருமாவளவன்

இழப்பீட்டு தொகையை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் தொல் திருமாவளவன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உள்ள குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண்கள் கருகி உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடி விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. இழப்பீட்டு தொகையை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தின்  காரணமாக பலர் இப்படி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. இதை முறைப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற பட்டாசு ஆலைகளை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.