பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? – அண்ணாமலை

ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு என அண்ணாமலை விமர்சனம். 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்தனர். பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வந்தனர்.

நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  பால்கொள்முதல் விலைக்குறித்து அமைச்சர் நாசர் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

அண்ணாமலை ட்வீட் 

இந்த நிலையில், இன்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு. ‘பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? பால் உற்பத்தியாளர்கள், ‘ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்க மாட்டோம்’ என்று போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதனால் ஆவின் நிறுவன பால் நுகர்வோர்களுக்கு, பத்து லட்சம் லிட்டர் அளவில், ஆவின் பால் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக தமிழக அரசு இதில் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமூக உடன்படிக்கை ஏற்படுத்த வேண்டும் என, பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Leave a Comment