பரபரப்பாகும் போர் பதற்றம்.. இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அரசியல் நிகழ்வுகளும் இந்த போரின் விளைவாக ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள், குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவு உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த இரு தரப்பு போரை நிறுத்த கோரி, உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் , பொதுமக்கள் என சுமார் 500 பேர் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.

காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் தாக்குதல்… 500 பேர் உயிரிழப்பு..! 

இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தவில்லை , ஹமாஸ் அமைப்பினரே தங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால் ஹமாஸ் தரப்பு இதனை முற்றிலும் மறுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறுகையில், பாலஸ்த்தீன ராணுவ விமானம் தான் தவறுதலாக தாக்குதல் நடத்தியது என குற்றம் சாட்டியுள்ளது.

இந்த சமயத்தில் தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உடன் சந்திப்பு நிகழ்த்த இருந்தார். ஆனால் அந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.  அங்கு போர் குறித்து இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு உடன் ஆலோசனை நடத்தவுள்ளார். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரை தீவிரப்படுத்த ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், காசாவிலுள்ள அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றால் நான் மிகுந்த ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். இந்தச் செய்தியை கேட்டவுடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசினேன், சரியாக என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சேகரிக்குமாறு எனது தேசிய பாதுகாப்புக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

தாக்குதலின் போது எப்போதும் குடிமக்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா துணை நிற்கிறது, மேலும் இந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிற பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறோம். என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.