இன்றைய நாள் தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு கரும்புள்ளி.! டி.டி.வி.தினகரன் கருத்து.!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்டது. – டிடிவி.தினகரன் டிவீட்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரைக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் எழுந்தது. இதனால், ஆளுநர் ரவி சட்டப்பேரவை நிகழ்வில் பாதியிலேயே , தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே வெளியேறி விட்டார்.

இந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்,  ஆளுநர் உரையின்போது தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் துரதிஷ்டவசமானவை. தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள் ஒரு கரும்புள்ளியாக மாறிவிட்டது. என கூறி இருந்தார்.

மேலும், ஆளுநர் உரையைத் தயாரித்து அதனை இறுதி அச்சுக்கு அனுப்புவதற்கு முன்பே இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆளுநர் மாளிகையும், தமிழக அரசும் சரிசெய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் சட்டப்பேரவையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் இன்று அரங்கேறியிருக்கின்றன.

அறிஞர் அண்ணா சொன்னதைப் போல, ஆளுநர் பதவி என்பது தேவையில்லை என்பதுதான் எங்களுடைய நிலைபாடும். அதே நேரத்தில், அரசியல் சட்டப்படி, அந்த பதவி இருக்கும் வரை அதிலிருப்பவருக்கு அரசு உரிய மரியாதை கொடுக்க வேண்டியதும் அவசியம்.

இதைப்போன்றே, மரபுகளை உடைத்துவிட்டு, சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் ஆளுநர் நடந்துகொண்டதும் சரியானதல்ல. ஆளுநருக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே தொடரும் இத்தகைய மோதல்போக்கு ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதோடு மக்களுக்கும், மாநிலத்துக்கும்தான் பாதிப்பை ஏற்படுத்தும். என அந்த டிவீட்டில் பதிவிட்டுள்ளார் டிடிவி.தினகரன்.

Leave a Comment