சேதமடைந்த வீடுகள். பயிர் சேதம்.. வணிகர்களுக்கு கடன்..! ரூ.1000 கோடி நிவாரண தொகுப்பு.!

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால், இரு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. அந்த வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 21ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் பல்வேறு நிவாரண உதவிகளை அறிவித்தார்.

அதே போல , டிசம்பர் மாத தொடக்கத்தில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அம்மாவட்ட மக்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னதாக நிவாரண  உதவிகளை அறிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ள பாதிப்பு நிவாரண உதவிகளைதமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.  அதன் மூலம் பயிர் சேத கடன், சேதமடைந்த வீடுகள், பாதிப்படைந்த தொழிலாளர்கள், சிறு தொழில் செய்ய கடன் என பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சேதமடைந்த வீடுகளுக்கு 385 கோடி ரூபாய் :

சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டுவதற்கு மற்றும் பழுதுபார்க்க 385 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 4577 புது வீடுகள் கட்டப்பட உள்ளன. 9975 வீடுகள் பழுதுபார்க்கப்பட உள்ளன.

பயிர் சேதம் 250 கோடி ரூபாய் :

பயிர் சேத நிவாரணமாக 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புயல் பாதித்த மழையால் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்து 64 ஆயிரம் டெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டது. இதற்கான மொத்த நிவாரணமாக 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிவாரணம் மற்றும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர் கடனும், வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான கடனும் வழங்கப்படும்.

சிறு – குறு வணிகர்களுக்கு கடன் : 

சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் வரையில் சிறப்பு கடன் வழங்கப்படும். மேலும், தெருவோர கடை வியாபாரிகளுக்கு 10 ஆயிரம் வரை நான்கு சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவியும், ஒரு லட்ச ரூபாய் கடனுதவிக்கு 6 சதவீத விகிதத்திலும் கடன் வழங்கப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கனமழையால் ஏற்பட்ட சேதத்தை சமாளிக்கும் விதமாக 3 லட்சம் வரையில் 6% வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படும்.

மகளிர் சுய உதவி குழுக்கள் – ரூ.350 கோடி :

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனாக 350 கோடி ரூபாய் வழங்கப்படும். சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சிறப்பு கடன் உதவி மூலமாகவும்,  ஏற்கனவே கடன் பெற்றுள்ள சுய உதவி குழுக்கள் நிவாரண கடன் தவணை மற்றும் வட்டியை திருப்பி செலுத்துவதற்கும், அவர்கள் பெற்றுள்ள கடனை மறுவரையரை செய்வதற்கும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகள் – ரூ.15 கோடி : 

சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணமாக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1928 சேதம் அடைந்த படகுகள் சீர் செய்யப்பட உள்ளன.

கால்நடைகளுக்கு நிவாரணம் :

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சுமார் 17000 கால்நடைகளுக்கும் , ஒரு லட்சத்திற்கு மேலான கோழிகளு, ஆடுகளும் உயிரிழந்த்ன.  பசு, எருமை உயிரிழப்புக்கு 37,500 நிவாரணமும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றுக்கு ரூ.4000 ரூபாய் வரையிலும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாய் வரையிலும் நிவாரணம் வழங்கப்படும். மேலும், புதிய கால்நடைகள் வாங்க  1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

உப்பள தொழிலாளர்களுக்கு 3000 ரூபாய் நிவாரணம் :

பதிவு செய்யப்பட்ட உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவி தொகையாக 3000 ரூபாய் கூடுதல் நிவாரண தொகையாக வழங்கப்படும்.

இது போக மழையால் சேதமடைந்த பள்ளி, கல்லூரி, சான்றிதழ், பாட புத்தகங்கள் புதியதாக வழங்குதல், வருவாய்துறை மற்றும் இதர அரசு துறைகள் மூலமாக வழங்கப்படும் சான்றுகள், ஆவணங்கள், வழங்குதல், வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கு காப்பீடு உள்ளிட்டவைகளும் மற்றும் இதர நிவாரண உதவிகளும் இந்த 1000 கோடி ரூபாய் நிவாரண தொகுப்பு மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.