இலங்கை அணி அபார வெற்றி ..! ஹசரங்கா அசத்தல் ..!

இலங்கையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில் 3 ஒரு நாள் தொடர், 3 டி20 போட்டிகள் கொண்ட  தொடரில் விளையாடி வருகிறது. 3  போட்டியை கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது. (முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது).

அதை தொடர்ந்து டி20 போட்டியில் இதுவரை நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் இருந்தனர். இதனால் இன்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை தொடர்ந்த கடினமான இலக்கை நிர்ணயிக்க வேண்டுமென கட்டாயத்துடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரான  கிரேக் எர்வின் தனது முதல் பந்திலேயே தீக்ஷனாவின் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திருப்பினார்.

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் யாரும் நிதானமாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிலும் ஹசரங்காவின் மிகவும் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே திணறியது. இறுதியாக ஜிம்பாப்வே  14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

சதம் விளாசி சாதனைகளை படைத்த ரோஹித் சர்மா!

அந்த அணியின் பிரையன் பென்னட் எடுத்த 12 பந்துகளில் 29 ரன்களே அதிக பட்ச ஸ்கோராக இருந்தது. இலங்கை அணியின் கேப்டன் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்து வீச்சில் ஜொலித்தார்.

இதை தொடர்ந்து 83 ரன்கள் என்ற  மிகவும் எளிதான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு  ஆரம்பம் முதலே சாதகமாகவே போட்டி அமைந்திருந்தது. மிகவும் எளிதான இலக்கு என்பதால் விக்கெட்டை எடுத்தால் மட்டுமே வெல்ல முடியும் என்ற முனைப்புடன் ஜிம்பாப்வே போராடியது. ஆனால் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிதறிடித்தனர்.

வெகு நேரத்திற்கு பிறகு வீழ்ந்த விக்கெட்டும் ஜிம்பாப்வே அணிக்கு கை கொடுக்கவில்லை. இதனால் இலங்கை அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 88 ரன்களை எட்டி போட்டியை வென்றதுடன் இந்த டி20 தொடரையும் கைப்பற்றியது. அந்த அணியில் அதிக பட்சமாக  நிஸ்ஸங்கா ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 1 சிக்ஸருடன்  39* ரன்கள் எடுத்து இருந்தார்.

இதனால் 3 போட்டி கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் தொடரை இலங்கை அணி வென்றது.