செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது..! மல்யுத்த வீரர்கள் மீதான தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இதற்கிடையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்திய மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.

போலீசார் வைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி, மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்ற கட்டடம் நோக்கி செல்ல முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களுக்கும் டெல்லி காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின், போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை போலீசார் பலவந்தமாக கைது செய்தனர்.

இதற்கு பல தரப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்துவந்த நிலையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள் என்று கூறினார்.

மேலும், இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் – தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.