மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல…! – ஓபிஎஸ் அறிக்கை

காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘காவேரி டெல்டா: மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டிற்கு ஒன்பது மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பணியினை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவளம் மேற்கொண்டு வருவதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அப்பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருப்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவேரி டெல்டா பகுதி விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும், காவேரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சில டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் வகையில், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம்  இயற்றப்பட்டது.

20-02-2020 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டமுன்வடிவு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நடைபெற்ற விவாதத்தில் பேசிய தற்போதைய முதலமைச்சர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், “பிரிவு 4(2)(b)-ன் கீழ் உட்கட்டமைப்புத் திட்டங்களான துறைமுகம், குழாய்கள், சாலை, தொலைத்தொடர்பு, எரிசக்தி, குடிநீர் வழங்கல் மற்றும் இதர பயன்பாடுகளுக்கான (Other Utilities) திட்டங்களை இந்தச் சட்டம் கட்டுப்படுத்தாது என்றும் கூறப்பட்டிருக்கிறது. இதில் Other Utilities என்பதன்கீழ் பெட்ரோல், கேஸ் எல்லாம் வராது என்பதற்கு என்ன உத்தரவாதம்?” என்று வினவி இந்தச் சட்டமுன்வடிவை Committee-க்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போதைய சட்டமன்ற உறுப்பினர். தற்போதைய தொழில் துறை அமைச்சர் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, “Oil and Gas-ல் இருக்கக்கூடிய derivatives இருக்கிறதே petrochemical அது முக்கியமான ஒன்று. வருங்காலங்களில் ஏதோ ஒரு மிக multi-national company-யோ அல்லது இந்தியாவில் இருக்கக்கூடிய Reliance போன்ற ஒரு giant-ஓ நான் அந்த மண்டலத்தில் petrochemical complex கொண்டு வருகிறேன் அல்லது Chemical factory கொண்டு வருகிறேன் அல்லது Pharmaceutical industry கொண்டு வருகிறேன் என்று சொன்னால் நான் அந்த இடத்திற்குத்தான் வருகிறேன், அந்த இடத்தில் வேறு பலவிதமான industries வருகின்றன என்று சொன்னால் நீங்கள் tanneries-னால் pollution வருகிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்ற பல்வேறு industries-ஐ விட மிக அதிகமான அளவு pollution-ஐ உருவாக்கக்கூடிய வேளாண் மண்டலத்தை பாதிக்கக்கூடிய petrochemical, fertilisers அதுபோல வேறுபல chemical industries அங்கு வருவதை எந்த வகையில் இந்தச் சட்டம் தடுக்கவிருக்கிறது” என்று வினவியிருக்கிறார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. காவேரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 இலட்சம் ரூபாய் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை MSME Trade and Investment Promotion Bureau என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எந்தத் தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோ அந்தத் தொழிலுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் அரசாசு தி.மு.சு. அரசு மாறிவிட்டது. இதுகுறித்து தொடர்புடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடை செய்யப்பட்ட பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லை என்று பதிலளித்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் பிரிவு 22(2)-ல், இரண்டாவது அட்டவணையில் உள்ள தொழிற்சாலைகளை நீக்கவோ அல்லது சேர்க்கவோ வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. சட்டத்தில் இடமில்லை என்றால் அதற்கான விதிகளை சேர்க்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்து காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என்பதும், சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி வேளாண் தொழிலை சீரழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்பதும்தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடும் இதுதான்.

‘மக்களுக்காக சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல’ என்பதைக் கருத்தில் கொண்டு, காவேரி டெல்டா பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.