OPS தரப்பு வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை – இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

அதிமுக பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ஓபிஎஸ்-க்கு இடைக்கால தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில், அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர்பேடு உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என்றும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி, உரிமை மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு அறிவுறுத்தியது. இந்த நிலையில், ஐகோர்ட் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.

ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு

இந்த சூழலில், கொடி, சின்னம், முகவரியை பயன்படுத்தினால் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தான் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். தற்போது தீர்ப்பும் சாதகமாக வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, கொடி, சின்னம் ஆகியவை அதிமுகவுக்கு சொந்தமல்ல என்றும் அதிமுக அலுவலகம் ஒரு ட்ரஸ்டுக்கு உள்ளது எனவும் ஒரு வினோதமான வாதத்தை ஓபிஎஸ் தரப்பினர் முன்வைத்தனர்.

இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒரு தவறான வாதம். முன்பு பொதுக்குழு கூட்டக்கூடாது, பொதுக்குழு கூட்டியது தவறு, பொதுக்குழு தீர்மானங்கள் என பல்வேறு வழக்குகள் போடப்பட்டு உச்சநீதிமன்றம் வரை சென்று ஓபிஎஸ் தோல்வியை சந்தித்தார். அதிமுக நல்ல இருக்கக்கூடாது, நாசமா போகவேண்டும் என்பது தான் ஓபிஎஸ்-யின் நோக்கம். அதை தான் செய்துகொண்டு இருக்கிறார் எனவும் விமர்சித்தார்.