பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்ளாமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை என முதல்வர் பேட்டி. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்பினார். அங்கு செய்தியாள்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது; இதேபோல, தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று பேசினேன்.

எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அக்கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன். பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இன்று நடந்தது என்று நினைக்க வேண்டாம். ஒடுக்கப்பட்ட, ஏழை-எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என பேசினேன். ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைத்திட வேண்டும் என தெரிவித்தேன்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் பாஜக தோற்கடிக்கப்படும். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்ளாமல் எந்த நோக்கத்தோடும் நான் வெளியேறவில்லை. நன்றி கூறும் வரை கூட்டத்தில் இருந்தேன். பின் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக வெளியே வந்தேன்.

பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படவில்லை. மாநிலத்தில் எந்த கட்சி செல்வாக்கு உள்ளதோ, அதன் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும். தேர்தலுக்கு பின் கூட்டணி அமைத்து கொள்ளலாம் என கூறுவது சரியான நிலைப்பாடாக இருக்காது. கூட்டணி அமைக்காவிட்டால் தொகுதி பங்கீடு செய்து கொள்ளலாம் என கூறினேன். பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.