பேட்டிங்கில் மிரளவைத்த டெல்லி அணி..! பஞ்சாப் அணிக்கு இமாலய இலக்கு..!

ஐபிஎல் தொடரின் இன்றைய PBKS vs DC போட்டியில், முதலில் பேட் செய்த டெல்லி அணி 213/2 ரன்கள் குவித்துள்ளது.

16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில்  விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதன்படி, டெல்லி அணியில் முதலில் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வார்னரும் பிருத்வி ஷாவும் இணைந்து அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 61 ரன்களை குவித்தனர். பின், வார்னர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரையடுத்து களமிறங்கிய ரிலீ ரோசோவ், பிருத்வி ஷாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில், பிருத்வி ஷா அரைசதம் கடந்து தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் ரோசோவும் சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்க விட்டு 80 ரன்களை கடக்க, போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது.

முடிவில், டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 82* ரன்களும், பிருத்வி ஷா 54 ரன்களும், டேவிட் வார்னர் 46 ரன்களும், பிலிப் சால்ட் 26* குவித்துள்ளனர். பஞ்சாப் அணியில் சாம் கர்ரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.