உக்ரைனில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் சென்னை வருகை!

ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாடு மாணவர்கள் சென்னை விமான நிலையம் வருகை.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட கேரள மாணவர்களும் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையம் வந்த 5 மாணவர்களையும் அமைச்சர் மஸ்தான் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்டோரில் 1,800 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மாணவர்கள் இன்று மாலை அழைத்து வரப்பட உள்ளனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்த 1100 பேரின் தகவல் திரட்டப்பட்டுள்ளது. அனைத்து தமிழக மாணவர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் முயற்சியால் மத்திய அரசின் ஒத்துழைப்போடு மாணவர்கள் தமிழர்கள் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது.

இதனிடையே, ஹங்கேரியின் புடாபெஸ்ட் பகுதியிலிருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு மேலும் ஒரு விமானம் இந்தியாவுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் மொத்தமாக 240 பேர் வந்தனர். விமான நிலையம் வந்தடைந்த 5 மாணவர்களை பூங்கொத்து கொடுத்து அமைச்சர் வரவேற்றார். ஏற்கனவே இரண்டு விமானங்கள் உக்ரைனில் இருந்து புறப்பட்ட நிலையில், மேலும் ஒரு விமானம் இன்று இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.