தேர்தல் பத்திரங்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

செப்.30 வரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

அதன்படி, இவ்வழக்கு விசாரணையின்போது, செப்.30 வரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை தாக்கல் செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதாவது, அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை பத்திரங்களின் விவரங்களை 2 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கட்சிகளுக்கு நன்கொடை தந்தவர்கள் யார் என்பதை கூறுமாறு தற்போதைய கட்டத்தில் எஸ்பிஐ வங்கியை கோரமாட்டோம். எனினும், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிய வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தற்போதைய தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி விவரங்களை தேர்தல் ஆணையம் திரட்டாதது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள் – உச்சநீதிமன்றம்

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை திரட்டுமாறு கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பற்றிய விவரத்தை திரட்ட வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கட்சிகள் பெற்ற நிதி விவரத்தை திரட்டாதது குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில நன்கொடையாளரின் விவரத்தை மட்டும் ரகசியமாக வைக்க தேர்தல் பத்திரம் திட்டம் வகை செய்வதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை தந்தவர் விவரத்தை அரசு அமைப்புகள் மூலம் ஆளுங்கட்சி கண்டறிய முடியும் என்றும் தேர்தல் பத்திரம் வெளிப்படையானது என்று கூறினாலும் பல தகவல்கள் மறைக்கப்படுவதாகவே நீதிபதி கருத்து கூறியுள்ளார்.

முன்பு இந்த வழக்கு விசாரணையின்போது, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் நன்கொடை பத்திரங்களை தயாராக வைத்திருங்கள், ஆய்வு செய்வோம் என்றும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை தடுக்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.