சிக்கிம் மாநிலத்தில் வார விடுமுறை ரத்து… மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு…

இந்தியாவின் சிறந்த மாநிலம் என்ற பெயர் பெற்ற சிக்கிம் மாநிலத்தில், அம்மாநில முதல்வர், பிரேம் சிங் தமாங் தலைமையில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த, முதல்வர், பிரேம் சிங் தமாங், அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றுவோருக்கு, வாரம் தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை என, அறிவித்திருந்தார். இதனால், வாரம் ஐந்து நாட்கள் மட்டும், அரசு ஊழியர்கள் பணியில் இருந்தனர். இந்நிலையில், அந்த தற்போது அறிவிப்பு திடீரென திரும்ப பெறப்பட்டுள்ளது. அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றுவோருக்கு, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை, ஏப்., 1 முதல், அமலுக்கு வரும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து  சிக்கிம் மாநில அதிகாரிகள் கூறும்போது, ‘வாரம் இரு நாட்கள் விடுமுறை அளித்தும், அரசு ஊழியர்களின் செயல்பாட்டில், திருப்தி ஏற்படவில்லை. அதனால், அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது’ என்றனர். இதனால் அம்மாநில அரசு ஊழியர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.