சிவம் சிங், ஆதித்யா அதிரடி பேட்டிங்..! திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ITT vs DGD போட்டியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி வீரர்கள், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 45 ரன்களும், விஜய் சங்கர் 43 ரன்களும், துஷார் ரஹேஜா 30 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து, 174 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.

இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விமல் குமார் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். அதன்பின் களமிறங்கிய பூபதி குமாரும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

இதையடுத்து, ஆதித்யா கணேஷ் களமிறங்க, நிதானமாக விளையாடிய சிவம் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து, ஆதித்யா கணேஷ்  அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் சிவம் சிங் மற்றும் ஆதித்யா இணைந்து அணியை வெற்றி இலக்கை எட்டச்செய்தனர்.

முடிவில், திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 74* ரன்களும், ஆதித்யா 59* ரன்களும் குவித்தனர். திருப்பூர் அணியில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.