“கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்கப்படும்” -வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்….!

காய்கறி அங்காடிகள் அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில்,தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.இந்த நிலையில், இன்று இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.முதன்முறையாக தனி வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

அதில்,ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.கடலூர், திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, கரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறிய அளவில் 10 உழவர் சந்தைகள் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,”ஊரக இளைஞர் வேளாண்திறன் மேம்பாட்டு இயக்கம் நடப்பு ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்.அதன் முதற்கட்டமாக 2,500 இளைஞர்களுக்கு  வேளாண் பயிற்சிகள் அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய,மாநில அரசுகளின் நிதியில் செயல்படுத்தப்படும்.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூர் மாநகராட்சிகளில் 30 நடமாடும் காய்கறி அங்காடிகள் அமைக்க கிராமப்புற விவசாய இளைஞர்களுக்கு 40% மானியம் அல்லது 2 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்”  என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.