மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

Election2024: மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் கடந்த 26ம் தேதி நடைபெற்று நிறைவு பெற்றது.

இந்த சூழலில் மணிப்பூரில் இரண்டாம் கட்ட தேர்தலின்போது 6 வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்ததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. உக்ருல், சேனாபதி, ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் ஆகிய 6 வாக்குச்சாவடிகளில் பல்வேறு இடையூறுகள், அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பின் அந்த 6 வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மீண்டும் வன்முறை வெடிக்காத வகையில் பலத்த ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அங்கு மாலை 4 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே மணிப்பூரில் முதற்கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததால் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 2ம் கட்ட தேர்தலிலும் வன்முறை வெடித்ததால் இன்று 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.