ராமர் கோவில் திறப்பு விழா: எந்தெந்த மாநிலங்களில் ஜனவரி 22 பொது விடுமுறை?

உத்தரபிரதேசத்தில் உள்ள புனித நகரமான அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜன. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக ராமர் பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய நபர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 22ம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதுபோன்று, பல மாநில அரசுகளும் அந்தந்த மாநிலங்களில் பொது விடுமுறை அல்லது அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளன.

ஜனவரி 22 அன்று விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்களின் பட்டியல்:

  • உத்தரப்பிரதேசம்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், மதுக்கடைகளுக்கும் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிப்பு.
  • குஜராத்: ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவைக் கொண்டாடும் வகையில், ஜனவரி 22-ம் தேதி குஜராத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் அரை நாள் மூடப்படும்.
  • சத்தீஸ்கர்:  அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள்கிழமை மதியம் 2:30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய பிரதேசம்: ஜனவரி 22ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் விடுமுறை, அரசு அலுவலகங்கள் மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்படும். மேலும், மாநிலத்தில் உலர் தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹரியானா: மாநிலத்தில் அனைத்து பள்ளிகளும் விடுமுறை.
  • ஒடிசா: ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும், வருவாய் மற்றும் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களும் வரும் 22ம் தேதி மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்பட்டிருக்கும்.
  • அசாம்: மாநிலத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உத்தரகாண்ட்: உத்தரகண்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் மதியம் 2:30 மணி வரை அரை நாள் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அன்றை தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிரா: மகாராஷ்டிர அரசு, ஜனவரி 22 அன்று மாநிலத்தில் பொது விடுமுறை அறிவித்துள்ளது.
  • ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அரசு அரை நாள் விடுமுறை.
  • கோவா: கோவாவில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் ராமர் கோயில் திறப்பு விழா அன்று முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திரிபுரா: திரிபுரா முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பிற்பகல் 2:30 மணி வரை மூடப்படும் என்று மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஹரியானா:  அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை.
  • சண்டிகர்: சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகம், அதன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 22 அன்று விடுமுறை அறிவித்துள்ளது.
  • புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட அரைநாள் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.! பங்குச்சந்தைக்கும் விடுமுறை.!

மேலும், ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு, வரும் திங்கள்கிழமை அனைத்து வங்கிகளும் அரை நாள் மூடப்பட வேண்டும் என்று நிதி அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகள் (PSB), காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் பிற்பகல் 2:30 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தற்போது ரிசர்வ் வங்கியும் பங்குச்சந்தைக்கு அரைநாள் விடுமுறை அறிவித்துள்ளது.