ராமர் கோயில் குடமுழுக்கு விழா: நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு.!

உத்திர பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் புதியதாக பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயில் திறப்பு விழாவானது (Pran Pratishtha) வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது .

இந்த விழாவில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கான விழா ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான முழு ஏற்பாடையும் ராமர் கோயிலை கட்டி முடித்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா எனும் அறக்கட்டளை மேற்கொண்டுள்ளது. அதன் தலைவரான நிருபேந்திர மிஸ்ரா பல்வேறு அரசியல் தலைவர்ளுக்கு அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்.

களைகட்டும் அயோத்தி கும்பாபிஷேக விழா.! தவிர்க்கும் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள்.!

இந்நிலையில், அயோத்தி, ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22ம்தேதி நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் இன்று ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார்,பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் திரு.அர்ஜுனமூர்த்தி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளுடன் ரஜினியை சந்தித்து அழைப்பிதழை வழங்கினர்.