ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா.! தஞ்சை பெரிய கோவிலில் கோலாகல கொண்டாட்டம்.! 

இன்று தஞ்சை பெரிய கோவிலில் 1038வது சதய விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன், தான் சோழ தேசத்து மன்னனாக முடிசூட்டிக்கொண்ட ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தில் இந்த சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இதே போல ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில் தான் ராஜ ராஜ சோழன் பிறந்தார் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கி.பி.985ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் முடிசூட்டிக்கொண்ட அருண்மொழி வர்மன் எனும் ராஜ ராஜ சோழன் பதவி ஏற்று இந்த வருடத்தோடு 1038 ஆண்டுகள் ஆகிறது.  இதனை குறிப்பிட்டு தான் இன்று சதய விழா நடைபெறுகிறது.

ஐகோர்ட் உத்தரவு… தேவரின் தங்கக் கவசத்தை பெற்றார் திண்டுக்கல் சீனிவாசன்!

இந்த சதய விழாவானது நேற்று முதலே தொடங்கியது. நேற்று தஞ்சை பெருவுடையார் கோவிலில் மங்கள வாத்தியம் இசைக்க, 1038 பாரத கலைஞர்கள் நடனமாட, கருத்தரங்கம் சிறப்பு பூஜைகள் என வெகு விமரிசையாக தொடங்கியது.

அதனை தொடர்ந்து, இன்று (அக்டோபர் 25) ராஜ ராஜ சோழன் மீட்ட பன்னிரு திமுறைக்கு சிறப்பு ஆராதனை அளிக்கப்பட்டது. அப்போது பன்னிரு திருமுறைகளை ஓதுவார்கள் பாடினார்கள்.இதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் – ஜேக்கப் , ராஜ ராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்றைய சதய விழாவில் ராஜ ராஜ சோழனுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தும் நிகழ்வில்,  சதய விழா குழு தலைவர்  செல்வம், ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்தம் பரமாச்சர்ய சுவாமிகள் என பலர் கலந்துகொண்டனர். இன்று 1038வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு இன்று (அக்டோபர் 25) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.