கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள படாதிரவாதான் கோவிலுக்குள் நுழைய ராகுல் காந்திக்கு தடை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அசாம் மாநிலத்தில் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

அசாமில் ராகுல் யாத்திரைக்கு ஆளும் பாஜக அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று காலை அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோவிலுக்குச் சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, கோவிலுக்குள் செல்ல முடியாத அளவிற்கு நான் என்ன குற்றம் செய்தேன் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியதோடு தனது போராட்டத்தின் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், கோவிலுக்கு வெளியில் இருந்து இறைவனை வணங்கி ஆசிர்வாதம் வாங்கினேன். வரம்பற்ற அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம் என்றார். இதற்கு விளக்கமளித்துள்ள காவல்துறை, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த பிறகு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.