#IPL2020: சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி அபார வெற்றி..!

இன்றைய 36-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறினார். பின்னர், இறங்கிய சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.

இதைத்தொடர்ந்து, இறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா சொற்ப ரன்களில் வெளியேற சிறப்பாக விளையாடி வந்த குயின்டன் டி காக் அரைசதம் அடித்து 53 ரன்னில் பெவிலியன் சென்றார். மத்தியில் இறங்கிய குருனல் பாண்டியா நிதானமாக விளையாடி 34 ரன் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர்.

கடைசிவரை பொல்லார்ட் 34 , நாதன் கூல்டர் 24 ரன்களுடன் களத்தில் நின்றனர். 177 ரன் இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மாயங்க் அகர்வால் இறங்கினர். தொடக்கத்திலே மாயங்க் அகர்வால் 11 ரன்னில் வெளியேற பின்னர், இறங்கிய கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் தலா 24 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தனர்.

ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும் அதிரடியாவும் விளையாடிய கே.எல்.ராகுல் 77 ரன் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தனர். இதனால், போட்டி டை ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 6 பந்தில்  2 விக்கெட்டை இழந்து 5 ரன்கள் எடுத்தனர். பின்னர், இறங்கிய மும்பை அணி 6 பந்தில் 5 ரன்கள் எடுத்ததால் போட்டி மீண்டும் சூப்பர் ஓவருக்கு சென்றது.

முதலில் இறங்கிய மும்பை அணி 6 பந்தில் 1 விக்கெட்டை இழந்து 11 ரன்கள் எடுத்தனர். பின்னர், இறங்கிய பஞ்சாப் அணி 4 பந்தில் 15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.