கொட்டும் பனி மழையில் ஒற்றுமை யாத்திரை நிறைவு விழா.! திருச்சி சிவா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்பு.!

தற்போது நடக்கும் பிரித்தாளும் அரசியலானது இந்தியாவை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த பிரித்தாளும் அரசியலால் தேசத்திற்கு நல்லது நடக்காது. – ஒற்றுமை யாத்திரை இறுதி நாள் விழாவில் பிரியங்கா காந்தி பேச்சு. 

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரியில் தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா வழியாக, கர்நாடகா மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் என 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என சுமார் 3,970 கிமீ தூரம் கடந்து சுமார் 70க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்ட ஒற்றுமை யாத்திரை இன்று நிறைவடைய உள்ளது.

காஷ்மீரில் ஒற்றுமை யாத்திரை : இந்த ஒற்றுமை யாத்திரையின் நிறைவடையும் நிகழ்வானது காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது. ஒற்றுமை யாத்திரை நிறைவு நாளில் பல்வேறு கட்சியினரின் மூத்த தலைவர்கள் திருச்சி சிவா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிறைவு நாளை முன்னிட்டு ஸ்ரீநகரில் பிரமாண்ட இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

பிரியங்கா காந்தி : இந்த நிகழ்வில் பேசிய ராகுல் காந்தியின் தங்கை ப்ரியங்கா காந்தி, ‘தற்போது நடக்கும் பிரித்தாளும் அரசியலானது இந்தியாவை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த பிரித்தாளும் அரசியலால் தேசத்திற்கு நல்லது நடக்காது. ராகுல் மேற்கொண்டிருக்கும் இந்த நடைபயணத்தை, ஒரு ஆன்மீக யாத்திரை எனலாம் என்று கூறினார்.

காஷ்மீர் மக்களின் கண்ணீர் : மேலும் பேசிய பிரியங்கா காந்தி, ‘  என் சகோதரன் (ராகுல் காந்தி) காஷ்மீருக்கு வருகையில் ​​என் அம்மாவுக்கும் எனக்கும் ஒரு செய்தியை தெரிவித்தான். வீட்டுக்குச் செல்வதில் தனக்கு ஒரு தனி உணர்வு இருக்கிறது என்றார். தனது குடும்பம் அவருக்காக காத்திருப்பதாக கூறினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எனது சகோதரனை கண்ணீருடன் கட்டிப்பிடித்தனர். காஷ்மீர் மக்களின் வலியும், உணர்ச்சிகளும் அந்த கண்ணீரில் தெரிகிறது.’ என்றும் பிரியங்கா காந்தி கூறினார்.

Leave a Comment