பணமோசடி வழக்கு.. குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்தி பெயர்..!

தொழில் அதிபர் சஞ்சய் பண்டாரிக்கு எதிரான வருமான வரி ஏய்ப்பு போன்று பல குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை, சிபிஐ விசாரித்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், ஹரியானாவில் நில மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பிரியங்கா காந்திவுடன் அவரது கணவர் ராபர்ட் வத்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் , தொழிலதிபர் சஞ்சய் பண்டாரியின் கூட்டாளியாகக் கூறப்படும் சிசி தம்பி, 2005 முதல் 2008 வரை ஹரியானாவில் உள்ள அமிபூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை டெல்லி ரியல் எஸ்டேட் முகவரான எச்எல் பஹ்வா மூலம் வாங்கினார்.

அதே நேரத்தில் ராபர்ட் வத்ராவும் 2005-2006ல் எச்.எல் பஹ்வாவிடமிருந்து அமிபூரில் 4 ஏக்கர் அளவுள்ள நிலத்தை வாங்கி, அதே நிலத்தை 2010 டிசம்பரில் எச்.எல் பஹ்வாவுக்கு விற்றுள்ளனர். நிலம் வாங்கியதில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய பின்னணியில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ராபர்ட் வதேரா மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அமலாக்கத்துறை குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மட்டுமே அமலாக்கத்துறை, சிபிஐ பயன்படுத்தப்படுவதாக நாங்கள் ஏற்கனவே கூறி வருகிறோம். பிரியங்கா காந்தி வத்ராவின் முழுமையான வழக்கு எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படும் விதம் முற்றிலும் தவறானது என தெரிவித்த்துள்ளார்.