மக்களே…இன்று 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

கொரோனா வைரஸை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக,கொரோனா தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் விதமாகவும், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது.இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,அந்த வைரஸிற்கு ஒமிக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல்,ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது.எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு 100 ஐ கடந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி ஒமிக்ரானை ஓரளவு கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையில்,அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய,மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது.

அந்த வகையில்,இதுவரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.மேலும்,75 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15 வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. அதன்படி,காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுவுள்ளது.மேலும், இந்த தடுப்பூசி முகாமில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

குறிப்பாக,சென்னையில் இன்று 200 வார்டுகளிலும் 1,600 இடங்களில்  தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.எனவே,அரசு தடுப்பூசி மையம்,ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு சென்று முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களும்,அவ்வாறு செலுத்தி கால அவகாசம் முடிந்தவர்களும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.