1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்…தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு..!

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மொத்தம் 3,677 காளைகளுடன் 1,412 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்த நிலையில் அதில் 1,000 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டியில் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.   ஜல்லிகட்டில் முதலில் கிராமத்தின் சார்பில் ஏழு கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.  பார்வையாளர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படையை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 160 பேர் கொண்ட மருத்துவ குழு, 90 பேர் கொண்ட 40 கால்நடை மருத்துவ குழு தயாராக உள்ளது.

15 ஆம்புலன்ஸ் மற்றும் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளன.  காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக களம் காணும் முதல்  காளை பிடி வீரருக்கு  நிசான் கார் முதல் பரிசு வழங்கப்படுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் காளை பிடி வீரருக்கு அப்பாச்சி பைக் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோல  சிறப்பாக களம் காணும் முதல்  காளைக்கு  நிசான் கார் முதல் பரிசு வழங்கப்படுகிறது. சிறப்பாக களம் காணும் 2-வது  காளைக்கு பரிசாக கன்றுடன் கூடிய காங்கேயம் நாட்டு பசு வழங்கப்பட உள்ளது. பல்வேறு வண்ண சீருடைகளில் ஒவ்வொரு சுற்றிலும் 50 மாடு பிடி வீரர்கள் களமிறங்க உள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று தொடங்கியது. முதல் சுற்றில் மஞ்சள் நிற சீருடை அணிந்த 50 மாடுபிடி வீரர்கள் களம் கண்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என மாலை 5 மணி வரை போட்டிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.