இறுதி வரை போராடிய மும்பை ..!! கடைசி ஓவரில் வெற்றியை தட்டி சென்ற டெல்லி !

IPL 2024 : நடைபெற்ற இன்றைய போட்டியில் டெல்லி அணி மும்பை அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்றைய பகல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர். இதனால் பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாடி மும்பை அணியின் பவுலர்களை கதிகலங்க வைத்தார்.

அவர் பவர்ப்ளேவில் 15 பந்துக்கு 52 ரன்களுக்கு எடுத்து அசத்தினார். அவரது அதிரடியில் டெல்லி அணி 7 வது ஓவரிலேயே 100 ரன்களை கடத்தது. 27 பந்துகளில் 6 சிக்ஸர் 11 ஃபோர்களுடன்  84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய டெல்லி அணியின் ஷாய் ஹோப் 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து மிரட்டினார், அதில் 5 சிக்ஸர்கள் அடங்கும். அதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் மும்பை அணியின் பந்து வீச்சை தேவையான இடங்களில் பவுண்டரிகள் விளாசி அணிக்கு உறுதுணையாக ரன்களை சேர்த்தனர்.

அதிலும் குறிப்பாக கடைசி நேரத்தில் அக்சர் பட்டேல் மற்றும் ஸ்டப்ஸ்ஸின் அதிரடியால் டெல்லி அணி இன்னிங்ஸ் இறுதியில் அணியின் ஸ்கோரை உயர்த்த நன்றாக உதவியது. இறுதியில் 20 ஓவருக்கு 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் 250+ ஸ்கோரை பதிவு செய்துள்ளனர்.  அதை தொடர்ந்து மும்பை அணி 258 என்ற இலக்கை எடுப்பதற்கு பேட்டிங் களமிறங்கினர்.

மும்பை அணிக்கு ஒரு நல்ல தொடக்க அமையாததால் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். இதனால் மும்பை அணி பவர்ப்ளே முடிவில் 65-3 என தடுமாறியது. அதன் பிறகு அணியின் கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியாவும், திலக் வர்மாவும் பொறுமையாக விளையாடி அணியின் ரன்களை சேர்த்தனர்.

திலக் வர்மா ஒரு புறம் பந்தியாவிற்கு உறுதுணையாக நிற்க பாண்டியா அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இருவரின் கூட்டணியில் 71 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் பாண்டியா 46 ரன்களில்  ராசிக் சலாம் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். அதை தொடர்ந்து வதேராவும் அதே ஓவரில் நடையை கட்டினார். இதனால் மும்பை அணியின் வெற்றி இங்கயே சரிந்தது என கூறலாம். அதன் பிறகு மும்பை அணியின் டிம் டேவிட்டும், திலக் வர்மாவும் போராடினார்கள்.

இருவரும் போராடியும், டெல்லி அணியின் அபார பந்து வீச்சால் இலக்கை எட்ட முடியாமல் மும்பை அணி திணறியது. இதன் காரணமாக இறுதியில் 20 ஓவருக்கு 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதனால், புள்ளிபட்டியலில் டெல்லி அணி 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.