மணிப்பூர் விவகாரம்..! மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைப்பு..!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி  தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த 11 நாட்கள் நடைபெற்ற கூட்ட தொடரில், மக்களவை, மாநிலங்களவையில் மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பிரதமர் அவையில் விளக்கம் அளிக்கவில்லை. இதனைக் கண்டித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தீர்மானம் மீதான விவாதம் வரும் 8ம் தேதி அதையாவது நாளை துவங்க உள்ளது. 10ம் தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிக்க உள்ளார். அன்றே வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்றும் வழக்கம் போல அவைத் தொடங்கியது. ஆனால் அவைத் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கினர்.

இதனால், இன்றும் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்பி பதவியை மக்களவை செயலகம் வழங்கியுள்ளது. இதனால், நாளை தொடங்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.