இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர்

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு இறுதியில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்றிருந்தார். அப்போது,  லட்சத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன், தனது அனுபவங்களையும் எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில், மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவரது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.

இதற்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடா்ந்து, இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.  இதன்பின், மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.

பின்னர் நாடு திரும்பிய மாலத்தீவு அதிபர், இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் மாலத்தீவு மீது அதிகாரம் செலுத்த எந்தவொரு நாட்டையும் அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து இந்தியாவை மறைமுகமாக தாக்குகிறார் என கூறப்பட்டது.

இந்திய குடியரசுதின விழாவில் பங்கேற்றது எனக்கு பெருமை… பிரான்ஸ் அதிபர் புகழாரம்.!

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார். இந்த நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என்று அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார்  மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அதிபர் முகமது மூயிஸ், எங்கள் இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ எந்த நாட்டையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

ஒப்பந்தம் புதுப்பிப்பு எதுவும் கிடையாது. வெளிநாட்டு ராணுவ இருப்பு தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். முதல்கட்டமாக  மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் உள்ள இந்திய ராணுவத்தினர் மார்ச் 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள்.  மீதமுள்ள 2 விமான தளங்களிலும் பணிபுரிகின்ற இந்திய ராணுவ வீரா்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் என தெரிவித்தார். மே 10ம் தேதிக்குள் இந்திய ராணுவம் மாலத்தீவை விட்டு வெளியேறும் என்று இந்திய அரசும் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மாலத்தீவில் சுமார் 87  இந்திய ராணுவ வீரர்கள் மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment