ஜெகதீஷ்ஷெட்டர் தேர்தலில் ஜெயிக்க மாட்டார்..! ரத்தத்தால் எழுதிக் கொடுப்பேன்..எடியூரப்பா பேச்சு..!

ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என்பதை ரத்தத்தால் எழுதிக் கொடுப்பேன் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஹுப்பள்ளியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான பிஎஸ் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஹூப்ளித் தொகுதியில் வெற்றிபெற மாட்டார் என்பதை எனது ரத்தத்தால் எழுதுத் தருவதாக கூறியுள்ளார்.

ஜெகதீஷ் ஷெட்டரின் உண்மை நிலையை விளக்கவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், ஜெகதீஷ் முதலமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட வேண்டும் என ​​நாங்கள் அனைவரும் ஷெட்டரை ஆதரித்தோம். ஆனால் ஷெட்டர் இதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது காங்கிரஸில் இணைந்து பாஜகவை குற்றம் சாட்டியுள்ளார் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இந்தத் தேர்தலில் தார்வாட் மாவட்டத்தில் உள்ள ஹூப்ளி தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேஷ் தெங்கினகாயியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கட்சி தலைமை சீட் வழங்க மறுத்ததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு காங்கிரஸ் கட்சி ஹூப்ளி சட்டமன்ற தொகுதியை ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.