4வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் உக்கிர போர்! பலி எண்ணிக்கை 1,600 கடந்தது.!

தொடர்ந்து 4வது நாளாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த போரில் இரு தரப்பிலிருந்தும் பலியானோர் எண்ணிக்கை 1,600 தாண்டியுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உலக நாடுகள் விரும்பும் நிலையில், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்றைய தினம், காசா எல்லை முழுவதும் இஸ்ரேல் ராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ அமைச்சர் தெரிவித்திருந்தார். “அப்பாவி இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் மனதை உலுக்குகிறது.” என இஸ்ரேல் பிரதமர் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று ஹமாஸ் அமைப்பினர், பல பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 5,000 ராக்கெட்டுகள் மூலம், இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இப்போது, காசாவை சுற்றியுள்ள பகுதிகளை வசப்படுத்தி விட்டோம் என்று இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.