அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை… இந்தந்த மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்த IMD!

Heatwave Alert: அடுத்த சில நாட்கள் உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உட்சபட்ச வெயில் சுட்டெரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது.

இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு உட்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 30ம் தேதி வரை மேற்கு வங்கத்தின் பல இடங்களிலும், ஒடிசாவின் சில இடங்களிலும் உட்சபட்ச வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர அடுத்த சில நாட்களில் பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா, ராயலசீமா, உள் கர்நாடகா, தமிழ்நாடு, கிழக்கு உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் வெப்ப அலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 28ம் தேதி வரை கேரளா மற்றும் மாஹே, 28 முதல் 29 வரை கொங்கன், கோவா மற்றும் வரும் 30ம் தேதி மேற்கு உத்தரப் பிரதேசம், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் ஆகிய இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.