‘இந்தியா’ – எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் தலைவர்களின் கருத்து…!

பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மற்றும் இன்று என இரண்டு நாள் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என 24 அரசியல் கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மல்லிகார்ஜுனே கார்கே 

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே அவர்கள்  பேசுகையில், பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆசைப்படவில்லை. காங்கிரஸ் அதிகாரத்திற்கு வருவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தை விட மக்கள் நலனும், மதச்சார்பின்மையுமே காங்கிரஸுக்கு முக்கியம். அரசியல் அமைப்பு, ஜனநாயகம் மதசார்பின்மை, சமூக நீதியை காப்பதே எண்களின் நோக்கம்.

பழைய கூட்டணியை தொடர பாஜக தலைவர்கள் மாநிலம், மாநிலமாக ஓடுகின்றனர். ED, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய விசாரணை அமைப்புகளை எதிர்கட்சிகளை தாக்கும் ஆயுதமாக பாஜக பயன்படுத்துகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது பொய் குற்ற வழக்குகள் போடப்பட்டுள்ளன. எம்எல்ஏக்களை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளை பாஜக செய்கிறது.

லாலு பிரசாத் யாதவ்

எதிர்க்கட்சிகளின் கூட்டம் நாட்டிற்கு தேவையான ஒன்று; நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்; விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், இளைஞர்கள் ஆகிய அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

அகிலேஷ் யாதவ்

நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளதால் இந்த கூட்டம் நடைபெறுகிறது; 3ல் இரண்டு பங்கு மக்கள் பாஜகவிற்கு எதிராக உள்ளனர்.

சீதாராம் எச்சூரி 

எதிர்க்கட்சிகளின் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனெனில் இந்தியாவை காப்பற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்; நாடு மிகப்பெரிய பலபரிமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய மக்கள் முன்னணி என்ற பெயரை வைக்க பரிந்துரை செய்துள்ளார்.

திருமாவளவன்  

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியாவை பாதுகாக்கும் கூட்டணி, மதசார்பற்ற இந்திய கூட்டணி என பெயர் வைக்கலாம். மணிப்பூரில் நிலவும் போராட்டம் குறித்து எதிர்கட்சித் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். வரும் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டத்தை பாஜக அமல்படுத்த உள்ளதை எதிர்க்க வேண்டும்.

நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்ய வேண்டும். அதற்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.எம்.காதர் மொஹிதீன்

ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிரித்து ஆட்சி செய்தனர்; இன்று பாஜக நாட்டை பிளவுபடுத்தி சீரழிக்கிறது; எனவே பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற, இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

மெகபூபா முஃப்தி

நாட்டின் பலமாக இருக்கும் பன்முகத்தன்மை அழிக்கப்படுகிறது; அதனால்தான் இந்தியாவின் இலட்சியத்தைக் காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

இந்தியா என பெயர் வைப்பு 

பெங்களூரில் நடைபெற்று வரும் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா‘ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.