சர்ச்சை கருத்து நான் சொல்லவில்ல….இருந்தாலும் தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன் -தன்யா பாலகிருஷ்ணா

லால் சலாம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார் என சில ட்வீட்கள் கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது.

இதனையடுத்து, தமிழக மக்கள் தன்யா பாலகிருஷ்ணனை திட்டி தீர்த்து வருகிறார்கள். மற்றோரு புறம் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் . எனவே படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்துள்ளார்.

தமிழர்களை கொச்சைப்படுத்திய தன்யா! லால் சலாம் படத்தை தடை செய்யக் கோரி மனு!

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில், இதுகுறித்து தன்யா பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் … கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்…அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட். ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவு படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்க ளே… அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன்.

என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு” என கூறியுள்ளார்.

Leave a Comment