லக்னோ நீதிமன்ற வளாகத்தில் தாதா சஞ்சீவ் ஜீவா சுட்டுக்கொலை!

லக்னோ நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கேங்ஸ்டர் சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சிவில் நீதிமன்ற வளாகத்தில் தாதா சஞ்சீவ் ஜீவா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போல் உடை அணிந்து வந்த சிலர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

பாஜக பிரமுகர் பிரம்மதத்தா திவேதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தாதா சஞ்சீவ் ஜீவா விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த துப்பாக்கிசூட்டில் காயமடைந்த காவல் அதிகாரிகள் சிவில் கோர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பிரபல தாதா முக்தார் அன்சாரியின் நெருங்கிய உதவியாளர் சஞ்சீவ் ஜீவா மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதுபோன்று, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள முக்தார் அன்சாரி கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளார். அவதேஷ் ராய் கொலை வழக்கில் தாதா முக்தார் அன்சாரிக்கு வாரணாசி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.