தமிழகம், மேற்கு வங்கத்தில் தடை.? உச்சநீதிமன்றம் சென்ற தி கேரளா ஸ்டோரி படக்குழு.!

தமிழகம், மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழு மனு அளித்துள்ளது. 

கடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகி ஆதரவையும் , எதிர்ப்பையும் கிளம்பியுள்ள திரைப்படம் தான் தி கேரளா ஸ்டோரி. சுதிப்தோ சென் எனும் பாலிவுட் இயக்குனர் இயக்கியுள்ள இந்த படமானது ஹிந்தி மட்டுமின்றி, தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தயாரானது.

இந்த திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பிரபல அரசியல் கட்சிகள் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என காரணங்களை குறிப்பிட்டு மேற்கு வங்க அரசு தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அதே போல, தமிழகத்தில் பட விநியோகிஸ்தர்கள்  மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட மறுத்ததால் மறைமுக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை குறிப்பிட்டு, தனக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு குறிப்பிட்ட மாநிலங்களில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என கோரி தி கேரளா ஸ்டோரி படக்குழு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு விசாரணை மே 12 (நாளை) வெளியாக உள்ளது.