சொந்த மண்ணில் இருப்பது போல் ஃபீல்.. எங்கள் ரசிகர்களும் வந்தால் நல்ல இருக்கும்.. முதல்முறையாக மனம்திறந்த பாபர் அசாம்!

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போட்டியுடன் தொடங்குகிறது. உலகக்கோப்பைக்கான போட்டி இன்று தொடங்கும் நிலையில், நேற்று தொடரில் பங்கேற்கு அனைத்து அணிகளின் கேப்டன்களை அகமதாபாத் வரவழைத்து உலகக்கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து “கேப்டன்ஸ் மீட்” என்ற பெயரில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை வர்ணனையாளர் ரவி சாஸ்திரி மற்றும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் தொகுத்து வழங்கினார். ரவி சாஸ்திரி மற்றும் மோர்கன் கேட்கும் கேள்விகளுக்கு அனைத்து கேப்டன்களும் பதில் அளித்தனர். இதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் கேப்டன்கள் அனைவரும் பதில் அளித்தனர்.

அப்போது பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமிடம் முதல்முறையாக இந்தியா வந்த அனுபவம் குறித்து ரவி சாஸ்திரி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய பாபர் அசாம், இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ரசிகர்கள் கலந்து கொள்ள முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பாகிஸ்தான் அணிக்கு இந்தியாவில் கிடைத்த வரவேற்பு தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

உண்மையைச் சொல்வதென்றால், இந்தியாவில் வரவேற்பு அச்சுறுத்தலாக இருக்குமோ என எண்ணினோம். ஆனால் நாங்கள் ஹைதராபாத் வந்ததிலிருந்து, நாங்கள் பெற்ற விருந்தோம்பல் மற்றும் விமான நிலையத்திலிருந்து ஹோட்டல் வரை எங்களுக்குக் கிடைத்த வரவேற்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வரவேற்பை ஹைதராபாத் மைதானத்தில் நடந்த கடைசி பயிற்சி போட்டியில் கூட நாங்கள் மிகவும் நன்றாக உணர்ந்தோம்.

இதனால், இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் ஆச்சரியமாக உள்ளது. இந்திய மண்ணில் எங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் அன்பை பொழிவார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. எங்களின் சொந்த வீட்டில் இருப்பது போல் உணர்கிறோம் என்பது போல் கூறினார்.

எனவே, உலகக்கோப்பை தொடரை காண எங்கள் ரசிகர்களும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு மைதானத்திலும் நாங்கள் அத்தகைய ஆதரவைப் பெறுவோம் என்று நம்புகிறேன். அதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எல்லையைத் தாண்டி ரசிகர்கள் வருவதற்கான சாத்தியக்கூறு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும், ங்கள் ரசிகர்களும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் பாபர் விருப்பம் தெரிவித்தார்.

நாளை ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி அக்-8ம் தேதி நடைபெறுகிறது. இதில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது.