இது அது இல்லை… பாஜக எம்எல்ஏவை விசாரிக்க மறுக்கும் அமலாக்கத்துறை.!

Election2024 : நயினார் நாகேந்திரன் தொடர்புடைய 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் மறுத்துள்ளது அமலாக்கத்துறை.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட மக்களவை தேர்தலின் போது வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் வாக்குப்பதிவு சமயம் வரையில் தேர்தல் பறக்குப்படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை பாஜக வேட்பாளரும், பாஜக எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தொடர்புடைய நபரிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று நயினார் நாகேந்திரன் தரப்பு கூறினாலும், நயினார் நாகேந்திரன் பெயர் வழக்குப்பதிவில் குறிப்பிடப்பட்டது. அதே போல, நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தொடர்புடைய திமுக அலுவலகத்தில் 28 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யபட்டது. இதனையும் பிறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த இரு பண பறிமுதல் வழக்குக்களையும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்காக கருதி அமலாக்கத்துறை விசாரணை செய்ய வேண்டும் என நெல்லை சுயேச்சை வேட்பாளர் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை சார்பில், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பான வழக்குகள் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்ற விதிகளின் கீழ் வராது எனவே, நாங்கள் அதனை விசாரிக்க முடியாது என அமலாக்கத்துறை சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கூறினார்.

இதனை அமலாக்கத்துறையினர் அறிக்கையாக தயார் செய்து நீதிமன்றத்தில் வரும் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் , சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.