ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் – மத்திய அரசு உத்தரவு.!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அவரவர் செல்போன்களில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி, அதற்கு மருந்து கண்டுபிடிப்பதும், மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதும் மிக அவசியம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனிடையே காணொலிக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா தொடர்பான தகவலை தெரிந்துகொள்ள ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திருந்தார். இதற்குமுன் ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடம் புதிய செல்போன்களில் இந்த செயலியை கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்ட போது, ஊரடங்கால் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதையடுத்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா குறித்து ஆலோசனை மேற்கொண்ட போது ஆரோக்கிய சேது செயலியை அனைவரிடமும் பிரபலப்படுத்துங்கள் என்றும் சிங்கப்பூர், தென்கொரிய போன்ற நாடுகளில் இதுபோன்று செயலிகளின் உதவியால் கொரோனா பாதிப்புகளை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சையளித்ததால் பலன் ஏற்பட்டிருக்கு என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அவரவர் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் கொரோனா தாக்கத்தை புரிந்துகொண்டு, அதனை பற்றி தெரிந்துகொள்ள இதுவரை ஆரோக்கிய செயலியை 5 கோடிக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கிய சேது செயலியின் சிறப்பு :

  • கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நபர் நமக்கு அருகில் இருந்தால், “ஆரோக்கிய சேது” நம்மை எச்சரிக்கை செய்யும் என்பதே இச்செயலியின் தனித்தன்மையாகும்.
  • நம்முடைய பெயர், தொடர்பு எண் போன்ற எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் மத்திய அரசை தவிர வேறு யாரும் அறிய இயலாது என்பது இச்செயலியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது.
  • வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தெரிந்துகொள்ளலாம்.
  • இச்செயலியை சோதனை முயற்சியாக கொரோனா கவச் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது “ஆரோக்கிய சேது” என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
  • GPRS மூலம் இயங்கும் இச்செயலி கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு செயல்படும். இத்தொற்று பாதிப்புள்ள இடத்தின் தூரத்தையும் இதன் மூலம் அறியலாம்.