கொரோனா வைரஸ் எதிரொலியால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை!

கொரோனா வைரஸ் எதிரொலியால் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் வெளியில் சென்று வேலை செய்ய முடியாத நிலையில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் 2,000 மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர்.  இப்பணியில் ஆண்டுமுழுவதும் 900-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, கோடைகாலம் தான் அவர்கள் தொழில் செய்வதற்கு ஏற்ற காலம். 

ஏனென்றால், கோடை காலத்தில் வீடுகளிலும், கடைகளிலும் மற்றும் பல்வேறு பொது  இடங்களிலும்  மண்பானை நீரை பயான்படுத்துவதுண்டு. இதனையடுத்து, புதுச்சேரியில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பானைகளை தொழிலாளர்கள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் டிசம்பர் மாதமே முடிந்து, பானைகளை முக்கிய கிராமங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா காரணமாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இந்த பானைகள் புதுச்சேரியில் தேங்கிக் கிடக்கின்றன.

இதனையடுத்து, மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தலைவர் சக்திவேல் இதுகுறித்து,  பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பானைகள் உற்பத்தி செய்தும் ஒரு பானை கூட விற்பனை செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். 

இந்த மண்பாண்ட தொழிலாளர்கள்  கோடை காலத்தில் மட்டுமல்லாது, கிறிஸ்துமஸ், கொலு, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற காலங்களில் வித விதமான பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்வதுண்டு. இவைகளும், கொரோனா வைரஸ் பரவலால், வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல், தூசி படிந்த நிலையில், தேங்கி கிடப்பதாக  கவலை தெரிவித்துள்ளனர்.