பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு… மன்னிப்பு கேட்ட பீகார் முதல்வர்.. !

நேற்று சட்டப் பேரவையில் பெண் கல்வி மற்றும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து பேசிய முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து பீகார் முதல்வர் நேற்று சட்டசபையில் பேசிய அவரது பேச்சு விவாதப் பொருளாக எக்ஸ்(ட்விட்டர் ),  ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மாறியுள்ளது.

நேற்று சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு தற்போது உள்ள பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு உள்ளது.  படித்த பெண் திருமணம் செய்யும்போது போது கருவுறுதலை தடுப்பதற்கான  வழிகளை கணவருக்குசொல்லி கொடுக்க முடியும். இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு பெண்களின் கல்வியறிவு தான் காரணம் என கூறினார்.

மேலும், கணவன், மனைவி இடையில் உள்ள பாலியல் உறவு தொடர்பாக சட்டசபையில் சைகைகளுடன் முதல்வர் பேசியதற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். முதல்வர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் எம்.எல்.ஏக்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். நேற்று சட்டப் பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசி கொண்டிருந்தபோது ​​திடீரென பாஜக எம்.எல்.ஏ நிவேதிதா சிங் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். வெளியே வந்ததற்கான காரணத்தை செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, ​​அவர் முதல்வர் நிதிஷ் குமாரின் பேச்சைக் கேட்டதும் நான் வெட்கப்பட்டேன். என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அவையை விட்டு வெளியேறினேன்.

நிதிஷ் குமார் கட்சியிலும் பெண் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் நிதிஷ் குமாரின் பேச்சை எப்படி உணர்ந்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். இதற்கு பீகார் மக்கள் வரும் காலத்தில் பதில் சொல்வார்கள் என கூறினார். இந்நிலையில், பீகார் சட்டசபையில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார். எனது கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன.

என் வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன். நான் சொன்னதை எல்லாம் திரும்பப் பெறுகிறேன். நான் பெண்களின் கல்வி குறித்து மட்டுமே பேசினேன். என் கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என இன்று சட்டசபையில் கூறினார்.