தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் நிதி பெறும் முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நிதி மசோதாவாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியை பெறுவதற்கு வழிவகுத்துள்ளது. அதாவது, அரசியல் கட்சிகள் நன்கொடை பெற உதவும் தேர்தல் பத்திரங்கள் நிதி சட்டம், கடந்த 2017 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தி இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் தேர்தல் நிதி வழங்குவதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிதி மசோதாவாகத்த தாக்கல் செய்யப்பட்டதால் நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது.

இது சட்டவிரோதம் என்றும் இந்த சட்டத்தில் உள்ள சரத்துகள் பலவும் அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீண்ட நாட்களாக விசாரிக்கப்படாமலேயே இருந்து வந்தது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வழக்கினை விசாரிக்க கோரிக்கை வைத்தபோது, தற்போதைக்கு தேர்தல் எதுவும் இல்லை, இந்த வழக்கினை உடனடியாக விசாரிக்க வேண்டியது இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தார்கள்.

இந்த சமயத்தில், தற்போது அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் அதிக அளவில் நிதி பெறுவதற்கு வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான மனுக்கள் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரச்சினையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், வரும் 30ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவித்துள்ளார்.