#BREAKING: டை பிரேக்கர் இரண்டாம் சுற்று தொடக்கம்..! வெற்றி பெரும் கட்டாயத்தில் பிரக்ஞானந்தா.!

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். அந்த போட்டியானது முதல் சுற்று டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது.

இந்நிலையில், உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று தொடங்கி நடைபெற்றது. இந்த டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காயுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காயுடனும் தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர்.

அதன்படி, பிரக்ஞானந்தா முதலில் e4-க்கு தனது காயை நகர்த்த, கார்ல்சன் e5-க்கு நகர்த்தினார். பிறகு சிறிது நேரம் வேகமாக இருவரும் தங்களது காய்களை நகர்த்தினர். விளையாடும் நேரம் 10  நிமிடமாக குறைந்ததும், மிகவும் நிதானமாக காய்களை நகரத்தினர். இறுதியில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கி உள்ள நிலையில், இருவரும் மீண்டும் களமிறங்கியுள்ளனர். இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது ஆட்டமானது ரசிகர்களுக்கு மிகுந்த ஏதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.