#BREAKING: பேச்சுவார்த்தைக்கு தயார்! ஆனால் பெலாரசில் வேண்டாம் – உக்ரைன் அதிபர்

பெலாரஸ் நாட்டில் நடைபெறும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்க உக்ரைன் அதிபர் மறுப்பு.

உக்ரைன் மீது தொடர்ந்து நான்காவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக தலைநகர் கீவ்-வை கைப்பற்ற ரஷ்யா ராணுவ படைகள் தாக்குதல் ஈடுபட்டு வந்த நிலையில், உக்ரைனின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியில் உள்ள இரண்டு முக்கிய நகரங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. மேலும்,  உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட 2வது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் தாக்குதல் நடத்தி அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே, உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என உக்ரைன் அரசு முன்னதாக கூறியிருந்த நிலையில் ,உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தங்களது பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் தயாராக இருப்பதாக சற்று நேரத்திற்கு முன்னர் ரஷ்ய அதிபர் மாளிகையான க்ரெம்ளின் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், ரஷ்யாவுடன் பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உக்ரைன் அதிபர், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால், ரஷ்யாவுடன் பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பெலாரஸ் பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என விளக்கமளித்தார்.

எனவே, ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் மறுப்பு தெரிவிக்கவில்லை, பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றே கூறியுள்ளார். பெலாரசில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நடத்தும் இடத்தை மாற்ற வேண்டும் என்பதுபோல் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

வார்சா, இஸ்தான்புல், புடாபெஸ்ட், பாகூ உள்ளிட்ட இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தினால் பங்கேற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, ஹிட்டலரை ஒன்றிணைந்து வீழ்த்தியதைப்போல் ரஷ்ய அதிபர் புதியனையும் வீழ்த்துவோம் என உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.