BAN vs SL: சதமடித்து விளாசிய சரித் அசலங்கா.! பங்களாதேஷ் அணிக்கு 280 ரன்கள் இலக்கு.!

BAN vs SL: ஒருநாள் உலக கோப்பை தொடரில் 38வது லீக் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, இலங்கை அணியில் முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் நிஸ்ஸங்க பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி நல்லத் தொடக்கத்தை அமைத்தார். ஆனால், குசல் பெரேரா 4 ரன்களிலேயே விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

குசல் மெண்டிஸ் களமிறங்கி ஓரளவு ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பதும் நிஸ்ஸங்கவும் தனது விக்கெட்டை இழந்தார். அதைத்தொடர்ந்து, சதீர சமரவிக்ரமா, சரித் அசலங்கா இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பொறுப்பாக விளையாடி வந்த சதீர சமரவிக்ரமா அரைசதத்தைத் தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

ஆனால் சரித் அசலங்கா சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். இதன்பிறகு களமிறங்கிய தனஞ்சய டி சில்வா, மகேஷ் தீக்ஷனா இருவரும் பொறுப்பாக விளையாடி முறையே 34, 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் சரித் அசலங்கா சதமடித்து விளாசினார்.

தொடர்ந்து பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் ஆட்டமிழந்து வெளியேறினார்கள். முடிவில், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி, 279 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சரித் அசலங்கா 108 ரன்களும், சதீர சமரவிக்ரமா மற்றும் பதும் நிஸ்ஸங்க இருவரும் 41 ரன்களும் எடுத்துள்ளார்கள்.

பங்களாதேஷ் அணியில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளும், ஷோரிஃபுல் இஸ்லாம் மற்றும் ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். தற்போது 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பங்களாதேஷ் அணி களமிறங்கவுள்ளது.